இரு வாரங்களுக்கு முன் திருவரங்கம் சென்றிருந்தேன். காலை நேரம்… அருகே வாளாடியில் உள்ள இரு நட்புகளின் வீடுகளுக்குச் சென்று வரலாம் என திடீர் எண்ணம். அப்படியே லால்குடி, அன்பில் சென்று பெருமாளையும் ஸேவித்து வருவோமே என்று நினைத்தேன். அடியேன் இளவல் (சித்தி மகன்) ரங்கராஜன் அண்ணா நானும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு தன் பைக்கை எடுத்தான்.
நான் கல்லூரி முடித்த புதிதில், மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் என திருச்சியில் இரு வருடம் நெல்லையில் இரு வருடம் என ஓட்டினேன். அந்த 97ல் நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயில் அருகே ஒரு வீட்டின் மாடியில் நண்பர்கள் நாலைந்து பேராக தங்கியிருந்தோம். கொண்டை சீனு என பட்டப் பேருடன் ஒருவன். வைதீகன். அவன் தான் அந்த இடத்தின் முதல் குடியேறி. பின்னாளில் ஒவ்வொருவராக ஒட்டிக் கொண்டோம்.
அப்போது பழக்கமானவர்கள் தான், சேது பாஸ்கர், பாஸ்கர வாத்யார் எல்லாம்! கும்பகோணத்துப் பூர்வீகம் சேதுவுக்கு. பாஸ்கர வாத்யார் அப்போது மேலப்பாளையத்தில் இருந்தார். அவ்வப்போது வந்து ஏதாவது சொல்லிக்கொடுத்து வாயை விடுவார்.
ஒரு நாள்… டேய் சீராமா எங்கடா கிளம்பிட்ட… என்றார்.
வழக்கம் போல் ஃபீல்டுக்குதான் அண்ணா என்றேன்.
மொத பைய வை. வேஷ்டி கட்டிண்டு வா… என்றார்.
அமர்ந்தேன்..
கல்லூரி நாட்களில் திருவரங்கத்தில் பிரபந்த அத்யயனம் செய்த பழக்கம் உண்டு. பஞ்ச சூக்தங்கள் பாடம் ஆகியிருந்தன. கல்லூரி முடித்த பின்னாளில் ஊருக்கு வந்த பின் ருத்ரம் சமகம் பாடம் ஆனது. தைத்ரீய உபநிஷதம், மந்த்ர புஷ்பம் இவை உடன் இருப்போர் சொல்லிச் சொல்லி பழக்கம் ஆகியிருந்தது.
அன்று பாஸ்கரண்ணா என்ன நினைத்தாரோ… ம் எழுது என ஒவ்வொன்றாக சொன்னார்…
அஹிர்புத்ந்ய ப்ரதமான ஏதி| ச்ரேஷ்டோ தேவானா முதமானுஷானாம் | தம் ப்ராஹ்மணா ச்ஸோமபா ஸோம்யாஸஹ | ப்ரோஷ்ட பதாஸோ அபிரக்ஷந்தி ஸர்வே | சத்வார ஏகமபி கர்ம தேவாஹா | ப்ரோஷ்டபதாஸ இதி யான் வதந்தி | தே புத்னியம் பரிஷத் யக்கு ஸ்துவந்தஹ| அஹிகும் ரக்ஷந்தி நமஸோபஸத்ய ||
எழுதிக் கொண்டேன். இரண்டு முறை சொன்னார்… கிரஹித்துக் கொண்டேன்.
சரி அண்ணா.. இது எதுக்கு என்றேன்…
காலைல குளிச்சிட்டு தயாரா இரு… பசங்களோட! சொல்லிவிட்டுச் சென்றார்.
காலையில் சங்கர்நகர் பக்கம் ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஏதோ ஒரு விஐபி.,யின் பங்களா…. எஜமானருக்கு உத்திரட்டாதி நட்சத்திரமாம்! பெரிய அளவில் சாந்தி பரிஹார ஹோமம் போலும்!
அதன் பிறகு தான் உதகசாந்தி பயிலும் ஆசை ஏற்பட்டது. தொடங்கினேன். ஆனால் முடியவில்லை.
செங்கோட்டையில் எங்கள் தெருவில் அப்போது இருந்த குஞ்சன் சாரிடம் அவ்வப்போது தலைகாட்டி… சொல்லிக் கொடுங்கள் என்பேன். அவரது இரண்டாவது மகன் கிருஷ்ணன் என்ற முரளி அண்ணா… BAN Labs மெடிக்கல் ரெப். அவரும் நெல்லையில் அதே அறையில் தங்கியிருந்தார். நெல்லையில் ஃபீல்டுக்கு வழிகாட்டி அவர்.
அதே அறையில் தங்கியிருந்த இன்னொருவர் ராதாகிருஷ்ணன் என்ற கண்ணன். எல்.ஐ.சியில் பணியில் இருந்தார். என்னைவிட ஓரிரு வயது மூத்தவர். செங்கோட்டைதான் ஊர். மேட்டுத்தெரு. வேலை காரணமாக நெல்லையில் தங்கி அலுவலகம் சென்று வந்தார். நன்கு மிருதங்கம் வாசிப்பார். அவரிடம் மிருதங்கம் பயில மீதி நேரங்களில் அமர்வேன். மாலை நேரம் நான் ஃபீல்டுக்கு போகவேண்டும். அவரோ அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பார். இருப்பினும் சில நாட்கள் … ஒதுக்கி பாலபாடம் கற்றேன். தா தை தொம் நம்… தா தரிகிட தீ தரிகிட தொம் தரிகிட நம் தரிகிட… சில நாட்கள் தான்… அதற்குள் சென்னை அழைத்துவிட… நெல்லைக்கும் தாமிரபரணிக்கும் ஒரு சிறு வணக்கம் போட்டேன்…
அந்த அறையில் இருந்த எல்லோருமே பிரமசாரிகளாக இருந்தோம்… கண்ணன் அண்ணாவுக்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மணம் ஆனது. மற்றவர்களுக்கும் அப்படியே! அதன் பின்னர் இவர்கள் எவரையும் பார்க்க வாய்ப்பு அமையவில்லை. போனில் பேசிக் கொள்வோம்.
செங்கோட்டை சொந்த ஊர் என்பதால், ராதாகிருஷ்ணன் என்ற கண்ணன் மட்டும் அடிக்கடி பார்த்து பேசிக் கொண்டிருப்பார். அவரும் திருச்சிக்கு பின்னர் மாற்றலாகி வாளாடியில் சொந்த இடம் வாங்கி வீடு கட்டினார். நான் திருச்சிக்கு வரும்போதெல்லாம் அழைப்பார். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.
இந்த முறை எப்படியாவது செல்ல வேண்டும் என்று வாளாடிக்குக் கிளம்பினேன். அன்றைய திங்கள் காலை… பையன் பள்ளிக்குச் சென்றிருந்தான். மகள் ஆன்லைன் க்ளாஸ். பெரம்பலூரில் இருந்து மாற்றலாகி, அன்றுதான் முதல் நாளாக துறையூர் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் கண்ணன் அண்ணா. சற்று நேரம் கதை பேசி… விடைபெற்று, அன்பில் சென்றேன்.
அன்பில் அப்பக்குடத்தான் என எப்போதோ தரிசித்திருந்த திவ்யதேசங்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது தரிசிக்கும் பேறு. அமைதியான, செழுமையான அதே காவிரிக்கரை.
லால்குடி நோக்கித் திரும்பும் வழியில், மணக்கால் … மணக்கால் நம்பிகள் ஆராதித்த பெருமாள் … கோயிலுக்குச் செல்லும் வழி என ஒரு போர்டு பார்வையில் பட்டது.
டேய் வண்டியைத் திருப்புடா… என்று இளவலுக்கு கட்டளையிட்டு… கோயிலுக்குச் சென்றேன்.
வீதியுடன் ஒட்டியபடி ஏதோ வீடுகளுடன் வீடாக இருந்தது. எதிரே… சந்நிதி வீதி இல்லை. சரி… இது அப்படியானால் மணக்கால் நம்பிகளின் அவதார இல்லமாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.
கோயிலில் அர்ச்சகர் ஸ்வாமி, அடுத்து வரும் மாசி மகம் பற்றியும், பத்து நாள் உத்ஸவம் பற்றியும் சொன்னார். ஸ்வாமி அப்போ வாங்களேன்… உத்ஸவம் நன்றாக இருக்கும்… என்றார். அவர் ராஜகோபால் என்ற ராம்ஜி. (9488391485)
இந்த ஆண்டு மாசி மகம் வரும் பிப்.27ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. மாசி மகம் என்றால் அதற்கு பல சிறப்புகள். அவற்றில் ஒன்று.. வைணவம் தழைக்க தம்மை அர்ப்பணித்த ஆசார்யர் மணக்கால் நம்பியின் அவதார தினம் அது என்பது! நம்பிகளின் பெருமை என்ன..?!
திருவரங்கப் பெருமானை, ஆளவந்தாருக்குக் காட்டியருளியவர்…. அரசபோகத்தில் இருந்த ஆளவந்தாரை அரங்கன் பக்கம் திருப்ப… தூதுவளைக் கீரையை தினமும் சமையலில் சேர்க்கக் கொடுத்து… திடீரென ஒரு நாள் கீரையைக் கொடுப்பதை நிறுத்தி… அரசர் ஆளவந்தாரை சந்திக்க வாய்ப்பு பெற்று… அதன் மூலம் அரங்க மாநிதியை அவருக்கு அளித்தவர். (மணக்கால் நம்பி குறித்த கட்டுரையை இணையத் தேடலில் கண்டு… இங்கே இணைக்கிறேன்…)
அவரது சந்நிதி இங்கே கோயிலில் தனியாக இருக்கிறது. அன்பில் அப்பக்குடத்தான் கோயிலடி என பயணம் செய்பவர்கள், செல்லும் வழியில் அதே சாலையில் இந்த மணக்கால் கிராமத்திலுள்ள நம்பிகளின் கோயிலுக்கும் சென்று, ஆசார்யரின் அனுக்கிரஹத்தைப் பெற வேணும்.
*****
மகத்தான மணக்கால் நம்பி ஸ்வாமிகள் அவதார திருநட்சித்திரம்; அதாவது ஸ்வாமி ஆளவந்தாரின் ஆசார்யரான ஶ்ரீ மணக்கால் நம்பிகளின் திருநட்சத்திரம்!
ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார் மணக்கால் நம்பி என்னும் ‘ராம மிஸ்ரர்’ என்னும் ஸ்வாமி
மணக்கால் நம்பிக்கும் ஆசாரியன் இராமானுஜருக்கும் சில பல ஒற்றுமைகள் உண்டு
மேலும் நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரைஸ்லோகத்தில் உள்ள ராமமிஸ்ரர் இவரே
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக அதாவது பரசுராமர் சீதாராமர் பலராமருக்குப் பின் என போற்றிக் கொண்டாடுகிறார்கள்
இவர் நான்காவது இராமர் என்றால் ஸ்வாமி இராமானுஜர் நான்காவது ஆதிசேஷனாவார்
எவ்வாறெனில் ஆதிசேஷனின் அவதாரங்களான இளையபெருமாள் இலக்குமணன் பலராமர் சேஷஅம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் என்றபடிக்கு நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.
இருவருமே ஆசாரியனுக்காக ஆற்று மண்ணில் மார்புற விழுந்த மஹநீயர்கள்
எப்படியெனில் மணக்கால் நம்பியின் ஆசார்யர் ஶ்ரீ உய்யக் கொண்டாரின் தேவியர் இளமையிலேயே பரம பதம் அடைந்துவிட்டதால் அவருடைய குடும்ப காரியங்களையும்
இரு திருக்குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உய்யக்கவண்டாரின் உத்தம சீடர் ராம்மிஸரர் (நம்பி)
ஒரு நாள் காலையில் பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில்சேறும்,சகதியுமாக இருந்தது அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை அதைகண்ட நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுக்க அந்த முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த சகதியான இடத்தைக் கடந்தனர் அவர்களின் மண்கால் இவரது மீதுபட்டதாலேயே இவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்
அவர் வாழ்ந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்பர்
அதுபோலவே ஶ்ரீராமானுஜர் ஶ்ரீரங்கத்தில் ஒரு சூழ்நிலையில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி தனது ஆத்மார்த்த சீடரைபார்க்க ஶ்ரீரங்கம் விரைந்து வந்தார்
தம் ஆசார்யர் தம்மை காண வருகிறார் என்றறிந்து விரதத்தால் தன் திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும் ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் வடதிருக்காவேரிக்குச் சென்று
காவேரி கரையருகே ஆசார்யரைக் கண்டவுடன் அந்த மத்யான வெயிலில் காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்
பொதுவாக யாராவது தண்டம் சமர்ப்பித்தால் ஆசிகூறி உடனே எழச்சொல்லி விடுவர் பெரியவர்கள்
இராமானுஜரின் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்றுமுற்றும் பார்த்தார் அதனால் சிறிது நேரம் உடையவர் சுடுமணலில் தண்டம் சமர்பித்தவாரே கிடந்தார் அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்
அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து ஆசாரியரான திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து
இது என்ன ஆசார்ய சிஷ்ய நிஷ்டை என்று கூறிவிட்டு ராமானுஜரை அள்ளி எடுத்து அரவனைத்துக் கொண்டார்
உடனே நம்பிகள் ஸ்வாமி உன் போன்ற ஒருவர் விரைந்து வர மாட்டாரா என்றுதான் காத்திருந்தேன் என்று கிடாம்பி ஆசானைத் தழுவிக்கொண்டு
இனிமேல் நீரே உடையவரை நன்றாக கவனித்துக் கொள்ளவேனும்
இன்றுமுதல் அவருக்குத் தளிகை செய்வது திருமேனியைக் கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும் என்று நியமித்தார்
மற்றொரு ஒற்றுமை
நம்பியும் ஆசாரியரும் தாங்களாகவே தேவையான போது ஒரு சிறு தூது விடுத்து ஶ்ரீரங்கன் சாட்சியாக நம் வைணவம் வளர்த்த தூய்மனத்துடைய பெரியோர்கள்
அதாவது இதிகாசங்களான
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் சீதாதேவிக்கும் ஶ்ரீஇராமருக்கும் இடையே தூது
மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது
என்றது போல
நம் மணக்கால் நம்பி சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய நாதமுனியின் பேரனான ஆளவந்தாருக்கு “தூதுவளைக் கூரையை” தூது போல் அனுப்பி அதாவது நாட்டின் மன்னரை எளிதில் சாதரணமானவர்கள் சந்திக்க முடியாது என்பதால் அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை அரண்மனை தளிகை செய்பவன் மூலம் தினமும் கொடுத்து திடீரென்று ஒருநாள் அப்படி அனுப்புவதை நிறுத்தி மன்னன் ஆளவந்தாருக்கு தூதுவளையின் ஆர்வத்தைத் தூண்டி இவரை அரச்சபைக்கு அழைத்து சந்திக்கும் சூழ்நிலையை உண்டாக்கி
அந்த சந்திப்பையும் அதன் பின் ஏற்பட்ட பிற சந்திப்புகளின் மூலம் ஆளவந்தாருக்கு ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து அவரை ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து நம்பெருமாள் முன்னர் நிறுத்த அன்றுமுதல் மாமன்னர் ஆளவந்தார் ஶ்ரீவைஷ்ணவத்தின் மஹா ஆசார்யர் ஆளவந்தாராகி விட்டார்.
இதுபோலவே ஆசாரியன் ஶ்ரீராமானுஜர் தம் உத்தமசீடர் கூரத்தாழ்வானை பெரியகோவில் நம்பியிடம் அவரது தாயரின் திருஅத்யயனத்துக்கு ஸ்வாமியாக தூது அனுப்பி அவரிடம் இருந்த கோவில்பொறுப்பையும் சாவியையும் வாங்கியதுடன் அந்த பெரியகோவில் ஜீயரை தனது சீடராக்கிங அவரை திருவரங்கத்து அமுதனார் என மாற்றி அதன்மூலம் நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு “இராமானுச நூற்றந்தாதி” என்னும் பிரபன்ன காயத்ரியை கிட்ட செய்தார்
இருவருமே பகவத் கீதைக்கு ஒரு விதத்தில் உரை செய்தவர்கள்
எவ்வாறெனில்
மன்னர் ஆளவந்தாருக்கு தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி மன்னர் ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து அவரைத் திருத்திப்பணி கொண்டார்
நம் போன்றோரைத் திருத்திப் பணிகொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானாரோ நமக்கு அருமையான்”கீதா பாஷ்யம்” அருளிச் செய்தார்.
இருவருமே பெண் குழந்தைகளுக்கு அதீதமான மதிப்பளித்தவர்கள்
இன்றைக்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று மேலே பார்த்தோம்
அதுபோல உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னைகளை ஏற்படுத்த பெண்வீட்டுச் சீர் வரிசையுடன் “சீதன வெள்ளாட்டி” என்றொருவரை அனுப்ப பெரிய நம்பிகளுக்கு வசதியில்லாத்தால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக்காட்ட அத்துழாய் தம் தந்தையாரிடம் முறையிட அவரோ என்னிடம் சொல்லி என்ன பயன்?
உன் அண்ணன் ‘ராமானுஜரிடம் சொல்’என்று கூற ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார் அதுவும் எப்படி எத்துனையோ சீடர்கள் இருக்க தமக்கு மிக வேண்டியவரும் துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த ஆசாரியரின் முதன்மை சீடரான முதலியாண்டானையே அனுப்பி வைத்து தன்ஆசாரியரின் பெண் குழந்தைக்கு மரியாதை செய்தார்
இப்படி ஆசாரியரை போன்ற குணமுடைய மணக்கால் நம்பியின் திருநட்சத்திரம் இன்று
மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:
“நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர்ருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாம ம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ்நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!”
மாசிமகம் சிறக்க நாமும் போற்றுவோம் கொண்டாடுவோம்……….