“இன்ப மாம்தீ பாவளி”
– மீ.விசுவநாதன் –
அன்புக் குழந்தை பாரதி – பொது
அறிவில் சிறந்த மாணவி
இன்ப மாம்தீ பாவளி – அவள்
தினமும் கொஞ்சும் வான்மதி
சின்னச் சின்ன பூவெடி – நம்
சிரிப்பு தானே சரவெடி
என்று சொல்லி ஆடுவாள் – அவள்
இதயம் நட்புக் காவடி
ஊரைச் சூழும் புகையென – வெடி
ஒன்றும் போட விரும்பிடாள்
நாரை கொக்கு குருவியும் – அதில்
நடுங்கும் என்று பதறுவாள்
என்னைப் போலச் சிறுமியர் – தான்
இந்த வெடிகள் செய்கிறார்
என்று வருத்தங் கொள்ளுவாள் – அதை
விட்டு வாங்கா தோடுவாள்
வீடு முழுதும் விளக்கினால் – ஒளி
வீசச் செய்து மகிழுவாள்
நாடு முழுதும் நம்முயிர் – எனும்
நல்ல இனிப்பு மனத்தினாள்.