Home இலக்கியம் கவிதைகள் தேர்தல் கால வெண்பாக்கள்

தேர்தல் கால வெண்பாக்கள்

தேர்தல் கால வெண்பாக்கள்”
(கவிஞர் மீ.விசுவநாதன்)


உயிரே உறவே உலகே எனவே
கயிறே திரிக்கும் கலையே – வயிறே
துடிக்கும் படியே குடியைக் கெடுக்க
நடிக்கத் தெரிந்ததே நாக்கு. (1)

மெய்யிலே ஆசையை மேன்மையாய்க் கொள்ளென்றேன் ;
செய்கிறேன் என்றவர் சொன்னதோ, ” பொய்யெனும்
தேகத்தில் முப்போகம் காண்பதற்கு எப்போதும்
காமத்துப் பாலைக் கல.” (2)

வாக்குக்காய் வாசலில் வந்து கிடப்போரே !
நாக்கில் நரம்பின்றி நாளெலாம் பேசியேன்
சேமம் கெடுக்கின்றீர் ! பேசாமல் ஊழலிலா
நாமத்தைச் சொல்லி நட . (3)

ஓட்டுக்காய் கையில் ஒருகாசு பெற்றாலும்
நாட்டுக்கு நாம்துரோகம் செய்கின்றோம் – வீட்டிற்குச்
சாபத்தைச் சேர்க்காதீர் ! மானமுடன் சொல்லிடுவீர்,
“பாபப் பணமே பதுங்கு “. (4)

மதுவிலக்கு வேண்டுமென மாநாடு போட்டுப்
புதுவழக்குப் பேசுகிறார் பொய்யர் – இதுபோன்ற
போலிகள்தான் நாக்கூச்சம் இல்லாமல் கூறுகிறார் ,
“கூலிக்கு ஜாலி குடி”. (5)

வெற்றிமேல் வெற்றி வெறிபிடித்த வெற்றியென
சுற்றித் திரியாதீர் சொந்தங்காள் ! – கற்றவர்
உள்ளத்தில் கள்ளம் புகுந்ததால் அந்தவோர்க்
கள்வனின் ஓட்டெலாம் காசு . (காசு – குற்றம்) (6)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version