நீத்தாருள் நின்றாலும் நின்னரிய சேவைகளால்
மூத்தாரின் வரிசையிலே முன்நிற்கும் நரேந்திரனே !
காத்தாராய், இந்துமத புகழ்பரப்பி இந்தியமண்
பூத்தாருள் முதலெண்ணாய் நிதம்வாழும் விவேகானந்தா !!
பிரம்மசமாஜ் இணைந்திட்டாய் பின், ராம கிருஷ்ணர் குரு
கிரமமாக பாரதமண் குமரிமுனை நடைபயணம்
அறுசமயம் இந்துமதம் எனும்மெய்யை பரப்பிட்டாய் !
அரிதான மூன்றுவகை யோகங்கள் விளக்கிட்டாய் !!
ஆன்மீகம் அத்வைத வேதாந்தம் யோகமுறை தான்புவனி மேன்மைபெறும் சாந்தம்வழி சொற்பொழிவால்
தோன்றுமெதிர் இளைஞரெல்லாம் தொடர்நிழலாய் பின்தொடர்ந்தார்!
வான்முகத்து சூரியனாய் முகப்பொலிவு சிந்தியதால் !!
திலகமதாம் மதமெதற்கும் இந்துமதம் என்பதனால்,
வளமதியான் பாஸ்கரசே துபதியார் செலவேற்க,
உலகமத மாநாட்டில் உன்பேச்சின் கரவொலிகள்,
விலகாமல்”சிகாகோ”போல் இங்கின்றும் கேட்குதம்மே !!
ஒழுக்கத்தின் வித்தென்ன ராமகிருஷ்ண மடம்,பள்ளி
பொழுதுக்கும் நிற்பனவே ! ஆன்மீக சுடர் விளக்கே !!
எழுமின் விழிமின்மேலும் உழைமின் எனும்வார்த்தை,
முழுமனித வர்க்கத்தின் மூச்சணைய மறையன்றோ !!
- கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்,
அஜினி, நாக்பூர், மஹாராஷ்டிரம்