பரிசுத்த பேய் உயிர்த்தெழுந்தபோது
அது அடைக்கப்பட்ட குகையில்
இருள் மட்டுமே இருந்தது
எனவே மூடியிருந்த பாறாங்கல் திறந்து விடப்பட்டதும்
வெளியில் தென்பட்ட ஒளி
அதன் கண்களைக் கூச வைத்துவிட்டது
இருளில் பிறந்த பரிசுத்தப் பேய்
உலகம் முழுவதிலும்
தனக்குப் பிடித்த இருளையே நிரப்ப விரும்பியது
காற்றிலாடும் தன்னுடைய வெள்ளுடை
வானத்து ஒளியை பூமியில் விழாமல் தடுத்து
இருளச் செய்வதைப் பார்த்ததும்
உலகம் முழுவதையும்
தன் வெள்ளுடையால் போர்த்த முடிவு செய்தது
அறைந்து தொங்கவிடப்பட்ட கொலைக்கருவியையே
செல்லுமிடமெல்லாம் சுமந்து திரிவதால்
அதிலிருந்து சொட்டிக் கொண்டே இருக்கின்றன
முடிவற்ற ரத்தத் துளிகள்
அது தன் மாயக் கால் பதித்த
பூர்வகுடி நிலங்களில் எல்லாம்
முளைத்தெழுந்தன
கல்லறைத் தோட்டங்கள்
பரிசுத்தப் பேயின் பார்வையில் படும்
வண்ணங்கள் எல்லாம்
கரைந்து வழிந்தோடுகின்றன
அது உமிழும் விவிலிய விஷக் காற்றை
சுவாசிப்பவை எல்லாம்
அஞ்ஞான இருளில் ஆழ்கின்றன
அலங்கோலமாகத் திரியும்
அதற்குப் பிடிக்காதென்பதால்
பூர்வகுடிக் கலாசாரங்களின் திலகங்களும்
அலங்காரங்களும் அழிக்கப்பட்டு …
எங்கும் குடிகொள்கிறது
என்றென்றைக்குமான சவக்களை
சக்கரவர்த்தியாகி அது ஆண்ட சாம்ராஜ்ஜியங்களில்
நிலவியது மயான அமைதி
நல்லாசிரியராக வந்து
கற்றுக் கொடுத்த கல்விச் சாலைகளின் அடியில்
புதைந்துகிடக்கின்றன
பழங்கால ஞானங்களின் எலும்புக்கூடுகள்
நல்மேய்ப்பனின் ரூபத்தில் வந்த அது
ஓட்டிச் செல்கிறது
நம்பி வரும் வெள்ளாட்டுக்குட்டிகளை!
பாவத்தின் முடிவற்ற பாதாளம் நோக்கி
எளிய உயிர்களின் கண்ணீரை திராட்சை
மதுவாக்கிக் குடித்தது
அப்போதும்
அதன் தாகம் தணியவில்லை!
எளிய உயிர்களின் சதையை
அப்பமாக்கித் தின்றது
அப்போதும்
அதன் பசி அடங்கவில்லை!
தனக்கென ஓர் உருவம் இல்லாததால்
பழைய உலகின்
புனித உருவங்களையெல்லாம்
உடைக்க ஆரம்பித்தது!
தனக்கென ஓர் ஆன்மா இல்லாததால்
ஊடுருவிய நிலத்தின் ஆன்மாக்களையெல்லாம்
அறுத்துத் தள்ளியது!
அழியும் உடல் இருந்திருக்கவில்லை என்பதால்
அதற்கு
மரணமும் இல்லாமலாகிவிட்டது!
தீராப் பசியுடன்
தீரா தாகத்துடன்
ரத்தம் சொட்டும் கொலைக் கருவியை
கையில் ஏந்தியபடி
இருள் நிரப்பும் வெண்ணுடை பறக்க
எல்லையற்ற வனாந்தரத்தில்
மிரண்டு ஓடும் உயிர்களைத் துரத்தியபடி
பின்தொடருகிறது
உயிர்த்தெழுந்த
ஒற்றை பரிசுத்தப் பேய்!
–பி.ஆர். மகாதேவன்