கவிதை: பத்மன்
நமோ நம!
உண்மைப் பெரியார் இவர்தானே
உரக்கச் சொல்வேன் நான்தானே
தொன்மை பாரதப் பெருமைதனை
தொண்டால் நாட்டப் பிறந்திட்டார்
வன்மை நெஞ்சில் ஓங்கிடவே
வஞ்சகர் கலையை வீழ்த்துகிறார்
திண்மை புயத்தில் கிளர்ந்தெழவே
திறம்பா நெறியதில் செல்லுகிறார்
தண்மை குணத்தைத் தலைக்கேற்றி
தயவாய் கடையரைத் தேற்றுகிறார்
புன்மை மிக்கவர் பழித்தாலும்
புன்னகை கொண்டே வெல்லுகிறார்
ஆண்மை என்பதும் இதுவன்றோ
ஆளுமை நிறைந்த பண்பாளர்
பெண்மையைப் போற்றிடச் செய்கின்றார்
பேணும் நல்லறம் காக்கின்றார்
மிடிமை போக்கிட உழைக்கின்றார்
மிடுக்காய் திட்டம் செலுத்துகிறார்
அடிமைச் சுவடுகள் அகற்றிடவே
அற்புதச் செயல்கள் ஆற்றுகிறார்
மறுபடி நரேந்திரன் பிறந்தாரோ?
மகேசன் நாரணன் திருவுளமோ!
மகாகவி கண்ட கனவெல்லாம்
மண்ணில் நனவாய் நடமிடுமோ!
முன்னை பாரதப் பெற்றியையும்
பின்னை பாரதப் பீடதையும்
இற்றை நாளில் இணைக்கின்றார்
ஈடில்லா பெரும்பணி புரிகின்றார்
தன்னலம் சிறிதும் கருதாமல்
தாய்நாட்டுக் குழைத்தல் யோகமன்றோ!
நன்றியை நாமும் சொல்லிடுவோம்
நரேந்திர மோடி நமோநம!