Home இலக்கியம் கதைகள் சிறுகதை: எனக்கு இதுதான் முதல் அனுபவம்!

சிறுகதை: எனக்கு இதுதான் முதல் அனுபவம்!

art-drawing
art-drawing

சிறுகதை – டியூஷன்

எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார்.

இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு வந்து விட்டேன். இப்போது அப்பா புதிதாக பிரைவேட் டியூஷனுக்கு ஏற்பாடு செய்த போது கவனமாகப் படிக்க வேண்டியிருக்குமே என்ற பயத்தை விட, டியூஷன் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆசை அதிகம் இருந்ததால் சரி என்று ஒப்புக் கொண்டேன். நான் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் போய்த்தான் தீர வேண்டும். அப்பாவின் கண்டிப்பு அப்படி.

அப்பாவின் ஆபீசில்தான் அவரும் வேலை பார்க்கிறாராம். அப்பாதான் பிடிவாதமாக அவரை ஒப்புக் கொள்ளச் செய்தாராம்.

முதல் நாள் அவர் வீட்டிற்கு அப்பா, நான், மூர்த்தி அங்கிள் மூவரும் சென்றோம்.

வாசல் கேட்டில் ‘எம். ராஜரத்தினம், பி.டெக், 10-8, சாந்தி நகர்’ என்று போர்டு போட்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து நங்கள் மூவரும் நடந்துதான் வந்தோம். கொஞ்சம் தொலைவுதான்.

“நாளைலேர்ந்து நீ சைக்கிளில் வந்து விடு” என்றார் அப்பா.

நாங்கள் போன போது மாலை ஆறு இருக்கும். கேட்டை திறக்கும் சப்தம் கேட்டதுமே ஒரு பெண் வந்து எட்டிப் பார்த்ததாள். அவர் மனைவி போலும். தூக்கிக் கட்டிய புடவையின் கீழே பளிச்சென்று உள் பாவாடை தெரிந்தது. கொலுசு போட்டிருந்தாள்.

எங்களைக் கண்டதும் புடவையைத் தழைய விட்டு உள்ளே சென்று விட்டாள். பார்க்க அழகாக இருந்தாள். நாங்கள் கேட்டருகிலேயே நின்றோம்.

லுங்கியும் பனியனுமாக எட்டிப் பார்த்த ஒரு ஆண் வெடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டார்.

அவரைப் பார்த்து அப்பா சிரித்தார்.

“அவர் தானா?” என்று கேட்டார் மூர்த்தி மாமா.

“ஆமாம். ரொம்ப கூச்ச சுபாவம்” என்றார் அப்பா.

எனக்கு வியப்பும் சுவாரஸ்யமும் ஏற்பட்டது. ஆண்கள் கூடக் கூச்சப்படுவார்களா, என்ன?

நாங்கள் அங்கேயே நின்று தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நித்திய மல்லிகையும், குண்டு மல்லிகையும் பூத்திருந்தன. கனகாம்பரம் சிவப்பும், மஞ்சளுமாக கண்ணுக்கு விருந்தாக இருந்தது. அப்போதுதான் தண்ணீர் ஊற்றிய அடையாளமாக நடைபாதையில் தண்ணீர் பைப்புகள் தாறுமாறாகக் கிடந்தன.

சற்றைக்கெல்லாம் சட்டை போட்டுக் கொண்டு கண்ணாடியைக் கையில் பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக வந்தார் அவர். ஒல்லியாக இருந்தார்.

“ஹல்லோ! வாங்க! வாங்க! உள்ள வாங்க!”

வரவேற்பறை போலிருந்த முன்னறையில் உட்காரச் சொன்னார்.

மர நாற்காலிகள் குஷனும், எம்பிராய்டரியுமாக எதிரில் டீபாயோடு நீட்டாக இருந்தன. சுவரில் கம்பளி நூலால் செய்த வால் ஹாங்கிங் ஒன்று மாட்டியிருந்தது.

எங்கள் வீட்டுக் கூடத்தை நினைத்துக் கொண்டேன். சுவரோரம் ஒற்றையாகப் பிரித்துப் போடப்பட்ட பெஞ்சுகள்தான் யார் வந்தாலும் உட்காருவதற்கு. தாத்தா கட்டிய வீடு. இனிமேல் அதை இப்படியெல்லாம் மற்ற முடியுமா என்ன?

“இவர் தான் மிஸ்டர் ராஜரத்தினம்” என்று மூர்த்தி அங்கிளுக்கும், “இவர் மூர்த்தி. என் நண்பர். புத்தகக் கடை நடத்துகிறார்,” என்று அவருக்கும் அப்பா அறிமுகம் செய்து வைத்தார்.

“ஒரு மாதமாக இவரைப் பேசிப் பேசி வழிக்குக் கொண்டு வந்தேன். சமீபத்தில்தான் பி.டெக். முடித்தார். பிரமோஷனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் ப்ரெஷ்ஷாக நினைவிருக்கும். இன்னும் தயங்கினால் எப்படி என்று நச்சரித்து ஒப்புக் கொள்ள வைத்தேன்,” என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் தரையைப் பார்த்துப் புன்சிரிப்போடு உட்காந்திருந்தார். என்னை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

short-story-girl

“மிஸ்டர் ராஜரத்தினம்! இவள் என் மகள் நீலிமா. பி.காம். இரண்டாம் வருடம் பரீட்சை எழுதி இருக்கிறாள். இந்த லீவில் ‘ஐ.சி.டபிள்யு.ஏ.ஐ’ என்ட்ரன்ஸ் அட்டென்ட் செய்து விட்டால் உபயோகமாக இருக்கும் நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள்” என்று அப்பா சொன்ன போது எனக்குச் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

தடிமனான ‘பிசினஸ் மேதமாடிக்ஸ்’ புத்தகத்தை அப்பா அவரிடம் கொடுத்தார்.

“இதைக் கொஞ்சம் படித்துப் பார்த்து தரோ செய்து விட்டால் போதும். டியூஷன் முடியும் வரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நான் இன்னொன்று வாங்கி இவளுக்குக் கொடுத்து விடுகிறேன்,” என்றார் அப்பா.

புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

“இதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. முதலிலிருந்து பிரிபேர் செய்ய வேண்டும். தினமும் வொர்க் அவுட் செய்து கொண்டு தான் கிளாஸ் எடுக்க முடியும். கஷ்டம் தான். நீங்கள் இதற்கென்று உள்ள டுடோரியல்ஸில் சேர்த்து விடலாமே,” என்றார் மெதுவாக.

குரல் கணீரென்று இல்லாமல் இனிமையாக இருந்தது.

“என்ன சார், இது! மறுபடியும் அதையே சொல்றீங்க! அங்க ஏகமாய்க் கேக்குறாங்களே? என்ட்ரன்சுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. டேக் யுவர் ஓன் டைம். முதல்ல உங்களுக்குப் புடிச்ச சாப்டரைச் சொல்லிக் கொடுங்க. அக்கவுண்ட்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ் எல்லாம் ஓரளவுக்கு இவளே படிச்சுக்குவா. நீங்க மாத்ஸ் மட்டும் சொல்லிக் குடுத்தா போறும். இவளும் புத்திசாலிதான். உடனே பிடிச்சுகுவா,” என்றார் அப்பா.

பீஸைப் பற்றி அவர்கள் பேசவில்லை. ஆபீசில் பேசிக் கொள்வார்கள் போலும்.

அவர் வேறு வழியில்லை என்பது போல் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு உடனே தலையைக் குனிந்து கொண்டார்.

அந்த ஒரு கணத்தில் பார்த்த போது, தீர்க்கமான அறிவும், சாத்வீகமும் தென்பட்டன.

அப்பாவை நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை. பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். கண்களில் கோபமும், கண்டிப்பும் தென்படலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

“இவருடைய மகன் பத்தாவது படிக்கிறான். அவனுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுத்தால் தேவலை,” என்றார் அப்பா மூர்த்தி அங்கிளைச் சுட்டிக் காட்டி.

“நோ, நோ, இதுவே எனக்கு அதிகம். நேரம் போறுமோ, போறாதோ! வேணும்னா ஸ்கூல் திறந்த விட்டுப் பார்க்கலாம்,” என்றார் அவர்.

“சரி. நாங்க கிளம்பறோம். நாளையிலிருந்து இவளை அனுப்பலாமில்லையா?”

அப்பா கேட்டுக் கொண்டே எழுந்தார்.

“கொஞ்சம் இருங்க. இதோ வரேன்,” என்று கூறிவிட்டு அவசரமாக எழுந்து உள்ளே சென்றார். இவர் போவதற்கும், அவர் மனைவி ஒரு டிரேயில் மஞ்சள் நிற ஜூஸ் நிறைந்த கிளாஸ்களுடன் வருவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் நிலைப்படியருகில் மோதிக் கொண்டிருப்பார்களோ என்று தோன்றியது. அவர் மனைவி டிரேயை டீபாயின் மேல் வைத்து விட்டுச் சென்று விட்டாள். அவரும் தன் மனைவியை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை.

எல்லோரும் ஜூஸைக் குடித்து விட்டுக் கிளம்பினோம். கேட் வரை எங்களோடு வந்தார்.

வாசல் பக்கமிருந்து ஓடி வந்த இரண்டு சிறுவர்கள், “அப்பா! நீயும் வெளில போறியா? ” என்றார்கள். ஒருவன் கையில் கிரிகெட் பாட் இருந்தது.

“இல்லடா,” என்றார் அவர்.

அவர் சகஜமாகப் பேசுவதை கேட்க ஆசையாக இருந்தது.

அவருக்கு வயது முப்பதைந்துக்குள்தான் இருக்கும் என்று தோன்றியது. அப்பாவோடு வேலை பார்ப்பவர் என்றதும் அப்பா வயது இருக்கும் என்று நான் நினைத்திருந்தேன். இரண்டு ஆண் குழந்தைகள் ஏழு வயதும், ஐந்து வயதுமாக.

அவர் மனைவி கொடுத்து வைத்தவள் என்று சம்பந்தமில்லாமல் நினைத்துக் கொண்டேன்.

வீட்டிற்குப் போகும் வழியில் மூர்த்தி அங்கிள் சொன்னார், “பணத்தைப் பார்த்தால் முடியுமா? இவர் இனிமேல்தான் படித்துச் சொல்லித் தருவதென்றால் எப்படி? இவர் மட்டும் பணம் குறச்சலாவா வாங்குவார்?”

“அப்படிச் சொல்லிடாதீங்க. மனிதருக்கு நல்ல அறிவு. இவள் புரிந்து கொண்டு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமே தவிர, அவரிடம் ஒன்றும் குற்றம் சொல்ல முடியாது. அதற்கென்று பிரைவேட் கோர்ஸைப் போல் கொள்ளையடிக்க மாட்டார். நாமாகத்தான் பலவந்தமாக டியூஷன் பீஸ் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார் அப்பா.

மறுநாள் போட்டுக் கொள்ள மஞ்சள் நிறச் சூரிதாரை இரவே தீர்மானித்துக் கொண்டேன். மறுநாள் காலையில் சாப்பிடும்போது, அம்மாவிடம் அவர்கள் வீட்டு முன்னறையும், தோட்டமும் எப்படி இருந்தன என்று விவரித்த போது அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. அம்மாவுக்கும் என்னைப்போல் குறையிருக்கும் என்று தோன்றியது.

மாலை ஐந்து மணிக்கு சைக்கிளில் போய் இறங்கியபோது ஓடி வந்து கேட்டைத் திறந்த சிறுவன், “அக்கா, உன் பேரென்ன?” என்று கேட்டான்.

“நீலிமா. உன் பேரென்ன?”

“பாலாஜி” என்றான் சிறுவன். இவன்தான் பெரியவனாக இருக்க வேண்டும். என்னை விடச் சிகப்பாக இருந்தான். இவனும் பெரியவனானால் தன் அப்பாவைப் போல் இருப்பானா என்று எண்ணிப் பார்த்தேன். விடை கிடைக்கவில்லை.

முன்னறையில் அதற்குள் அவர் வந்து உட்கார்ந்தது தெரிந்தது. பாண்ட் போட்டிருந்தார். அவசரமாகப் போய் செருப்பைக் கழற்றிவிட்டு, “குட் ஈவினிங் அங்கிள்,” என்றேன்.

“குட் ஈவினிங். உட்கார்,” என்றார் எதிரிலிருந்த நாற்காலியைக் காட்டி.

சுவரில் நேற்று வால் ஹாங்கிங் தொங்கிய இடத்தில் இன்று ரெக்சின் பிளாக் போர்டு தொங்கியது.

கையில் சில பேப்பர்களை வைத்துக் கொண்டு போர்டருகில் போனவர், மீண்டும் திரும்பி வந்து உட்கார்ந்தார்.

“உனக்கு எந்த சப்ஜெக்டில் இன்ட்ரஸ்ட் அதிகம் என்று சொன்னால் அதில் கான்சன்ட்ரேட் செய்யலாம். அந்த கேள்விகளில் மார்க் அதிகம் வந்துவிடும். பர் எக்ஸாம்பில், உனக்கு கால்குலஸ் பிடிக்குமா, அல்லது அல்ஜீப்ரா, இல்லாவிட்டால் சர்ட்ஸ் பிடிக்குமா?”

“உங்கள் இஷ்டம் அங்கிள். இப்போது இரண்டு வருடங்களாக கணக்கெல்லாம் டச்சே போய்விட்டது. எனக்கு எல்லாம் ஒன்றுதான்.”

நிமிர்ந்து பார்த்தார். ஆச்சர்யப்பட்டிருப்பார் போலிருந்தது.

“கால்குலஸ் வருமா?” என்றார்.

“ஐயோ அது கஷ்டம்” என்றேன்.

“ஹ்ஹா! இருப்பதிலேயே அது தான் ஈஸி,” என்று பாதிச் சிரிப்பு சிரித்தார். இடது பக்கம் சிங்கப் பல் இருப்பது தெரிந்தது. உதடுகள் ரோஸ் நிறத்தில் இருந்ததன். எவ்வளவு அழகாகச் சிரிக்கிறார்!

“சரி. போகிறது. ஏ மைனஸ் பி ஹோல் ஸ்கொயர் என்ன சொல்லு பார்க்கலாம்” என்றார் திடீரென்று.

நான் விழித்தேன். முதல் நாள் உடையைப் பற்றி நினைத்த நேரத்திலாவது கொஞ்சம் பழைய பார்முலாக்களைப் பார்த்திருக்கலாம் என்று நினைத்து வருத்தப் பட்டேன்.

“என்ன…? மறந்து போச்சா? இல்ல தெரியாதா?”

என்னை நேராகப் பார்த்து கேட்டார்.

“மறந்துடுச்சு அங்கிள்.”

“கால் மீ சர்”

அவருக்குக் கோபம் வந்திருக்குமோ? அப்பா சொல்லியபடி நான் ஒன்றும் அவ்வளவு புத்திசாலி இல்லை என்று தெரிந்து கொண்டிருப்பாரோ?

எழுந்து போய் போர்டில் வரிசையாக பார்முலாக்களை எழுதினார். எல்லாம் ஏழாவதிலிருந்து படித்தவைதான். பார்த்தபின்தான் ஞாபகம் வந்தது.

“இதெல்லாம் வீட்டுக்குப் போய் பக்கம் பக்கமாய் எழுதிப் பழகு. வேறு எஸ்கேப் கிடையாது. கஷ்டப்படணும். இல்லாட்டா கணக்கு வராது. புரியுதா?” என்றார்.

கையில் பத்து பேப்பர்களாவது வைத்திருப்பார் போலிருந்தது.

போர்டில் விவரித்துக் கொண்டே எழுதத் தொடங்கினார்.

நடுநடுவில் என்னைக் கேள்விகள் கேட்டார். நான் தடுமாறிய போதெல்லாம் அவருடைய அழகான பாதிச் சிரிப்பைச் சிரித்து என்னைப் பரவசமாக்கினார். ஒரு வேளை கோபத்தை மறைக்கும் வழியோ என்று நினைத்த போது பயமாக இருந்தது. நான்கு கணக்குகள் போட்டிருப்போம். அதற்குள் யாரோ வந்தார்கள்.

“ஹல்லோ! வாங்க!” என்று அழைத்தார் சார். இவருடைய நண்பர் போலும்.

“அடடே! டியூஷன் எடுக்கறீங்களா? எனக்குத் தெரியாதே! சரி.அப்பறம் வரேன்.”

“பரவால்ல. பரவால்ல. உட்காருங்க” என்றார் அவசரமாக.

வந்தவர் வாசலுக்குச் சென்று விடவே இவரும் கூடவே சென்றார். அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டாலும் நன்றாகக் காதில் விழுந்தது.

ஏதோ சேவிங்க்ஸ் ஸ்கீம் பற்றிப் பேசினார்கள். போகும் போது அந்த நண்பர் சொன்னார், “நீங்க என்னவோ ஸ்கூல் மாதிரி போர்டுல எழுதிச் சொல்லித் தர்ரீங்களே! தொண்ட தண்ணீல்ல போகும்? பேசாம எதிர்ல உக்காந்து நோட்ல எழுதிச் சொல்லிக் குடுங்க. என் பிரண்டு ஒருத்தர் அப்படித்தான் செய்வாரு. கத்த வேண்டியிருக்காது. இல்லாம போனா, நாம் பாட்டுக்குக் கத்திகிட்டிருப்போம். அவங்க பாட்டுக்குத் தூங்கிகிட்டிருப்பாங்க,” என்று சொல்லி விட்டுப் போனார்.

எனக்கு கோபம் வந்தது.

அவரோ சாக்பீசைப் போட்டு விட்டு, நேரே வந்து நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். நான் எழுதிக் கொண்டிருந்த நோட்டை வாங்கிப் பார்த்தார்.

அதிலேயே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அவ்வளவு அருகில் அவர் அமர்ந்து எழுதுவதைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது.

நகமெல்லாம் சுத்தமாக வெட்டப்பட்டிருந்தது. இடது கையில் ‘ஆர்’ என்று பொறிக்கப்பட்ட மோதிரம் போட்டிருந்தார். முத்து முத்தாக எழுத்துக்கள். இடது கை நகங்களில் மருதாணிச் சிவப்பு லேசாகத் தெரிந்தது. கழுத்தில் செயின் போட்டிருந்தார். புல் ஹாண்ட் ஷர்ட்டின் கையை மடித்து அடிக்கடி வாட்சைப் பார்த்துக் கொண்டார்.

நடு நடுவில் என்னை நிமிர்ந்து பார்த்தார். நான் கவனிக்கிறேனா இல்லையா என்று.

அப்படிப் பார்த்த போது தான் ஒரு முறை அவருடைய மீசையைக் கவனித்தேன். அளவாகக் கத்தரித்திருந்தார். அடர்த்தியில்லை. நான் இதற்க்கு முன் ஆண்களின் மீசையை இவ்வளவு அருகில் பார்த்தது கிடையாது அப்பாவுக்கு மீசை இல்லை. நான்தான் வீட்டில் பெரியவள். தம்பிகள் இருவரும் ஒன்பதாவதும் ஏழாவதும் படிக்கிறார்கள்.

சொல்லிக் கொடுத்த மாடலில் வேறு ஒரு கணக்கு கொடுத்துப் போடச் சொன்னார். கஷ்டப்பட்டுதான் போட்டேன். ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனித்துக் கொண்டே வந்தார். இடையிடையே விரலை நீட்டி, “செக் யுவர் அடிஷன்,” என்றோ, “நோ. யு ஆர் ராங்” என்றோ திருத்தினார். “புரிகிறதில்லையா? அதர்வைஸ் யு டெல் மீ” என்றார் அடிக்கடி. எங்கள் எகனாமிக்ஸ் மிஸ் கூட இப்படித்தான் சொல்லுவார்.

ஹாலில் டிவி வைத்திருப்பார்கள் போலிருந்தது. டிவியில் பேச்சு கேட்பதும், உடனே பட்டென்று அணைப்பதும் புரிந்தது. குழந்தைகள் போட்டிருப்பார்கள் போலும். குழந்தைகளை டியூஷன் ரூமுக்கு வர விடாமல் ஜாக்கிரதையாக இருப்பார்கள் போலிருந்தது.

மொத்தமாக ஆறு கணக்குகள் முடிந்த போது அவர் மனைவி வந்து அங்கேயிருந்த இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டாள். மாலை குளித்திருப்பாள் போலிருந்தது. சோப்பும் பவுடரும் வாசனை அடித்தது. தலையில் குண்டு மல்லிகை வைத்திருந்தாள். அது இன்னும் மொட்டாக இருந்தது. பின்னல் நீளமாக இருந்தது. கையில் வாரப் பத்திரிக்கை. அவரை விடக் கொஞ்சம் குண்டாக இருந்தாள்.

“மழை வரும் போலிருக்கு இல்ல?” என்று கேட்டார் மனைவியைப் பார்த்து.

“ஆமாம். அப்படித்தான் இருக்கு. மணியாயிடுச்சே. இருட்டிடும் போலிருக்கு” என்றாள்.

என்னை விரட்ட வழி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

“ஓ. கே. நாளைக்கு வரும் போது ஃபண்டமென்டல்ஸ் எல்லாம் தரோவா இருக்கணும். இந்த சாப்டர்ல இன்னும் ஐந்து கணக்குதான் இருக்கு. அதை நாளைக்குப் போட்டுப் பார்த்துச் சொல்லித் தரேன். சரி தானே?” என்று எழுந்து கொண்டார்.

“தாங்க்யு சர். குட்நைட்” என்று சொல்லிக் கொண்டுக் கிளம்பினேன்.

அவரும் “குட் நைட்” என்றார்.

அவர் மனைவி என்னுடன் ஒன்றுமே பேசவில்லை. தன் கணவரை கஷ்டப்படுத்துகிறேன் என்று கோபமாக இருக்கலாம். இந்த கிளாஸ் இல்லாவிட்டால் மாலைப் பொழுது அந்தக் குடுபத்தாருக்கு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கும். இப்போது ஏதோ கட்டுப்பாடு போல் அவரவர் சத்தப்படுத்தாமல் இருக்க வேண்டியிருக்கிறது.

சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது திரும்பிப் பார்த்தேன். அவர் மீண்டும் உட்கார்ந்து பேப்பரில் எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது.. கொஞ்சம் நின்று கவனித்தேன். உள்ளேயிருந்து கையில் ரயில் பொம்மையோடு குழந்தைகள் ஓடி வந்து அவர் கழுத்தை கட்டிக் கொண்டனர்.

“கொஞ்சம் தள்ளிப் போங்கடா,” என்று சொல்லிவிட்டு, கண்ணாடியைக் கழற்றி துடைத்துப் போட்டுக் கொண்டார். மீண்டும் மும்முரமாக எழுத ஆரம்பித்தார்.

இவர் படும் கஷ்டத்துக்காகவாவது சின்சியராகப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பெடலை மிதித்தேன்.

  • ராஜி ரகுநாதன்
    (கணையாழி, அக்டோபர் -1988ல் பிரசுரமான கதை)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version