சென்னை மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி வரதன் 42. இவர், வீட்டில் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் கால் தவறி கீழே விழுந்து விட்டார்.காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என மைதிலி வரதன் கூக்குரலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்தப்படி மைதிலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மைதிலி வரதனிடம் பேச்சுக் கொடுத்து, பயப்படாமல் இருங்கள், நாங்கள் உங்களை எப்படியாவது காப்பாற்றி மேலே தூக்கி விடுவோம் என்று கூறினர். மின்னல் வேகத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினார். அடுத்ததாக மைதிலி வரதனைத் தூக்குவதற்கு ஏற்ப கயிறு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.இதையடுத்து அந்தக் கயிறு மூலம் மைதிலி வரதனை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தீயணைப்பு வீரர்கள் வெளியில் கொண்டு வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, கிணற்றுக்குள் விழுந்ததில் மைதிலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், “கிணற்றுக்குள் விஷ வாயு இருக்க வாய்ப்புள்ளது. இதனால் கவனத்துடன் மைதிலியைக் காப்பாற்ற முடிவு செய்தோம். அவர் விழுந்த கிணற்றில் ஆழம் 30 அடி இருக்கும். மேலும் அதில் குறிப்பிட்ட சில அடிதான் தண்ணீர் இருந்தது. இதனால்தான் கிணற்றுக்குள் விழுந்த மைதிலி, நீரில் மூழ்கவில்லை. வழக்கமாக விஷவாயு சோதனை செய்துவிட்டுதான் கிணற்றுக்குள் இறங்குவோம். அதன்படி அந்தக் கிணற்றுக்குள் வீரர் ஒருவர் கயிறு மூலம் இறங்கினார். அதன்பிறகு இன்னொரு கயிறு மூலம் மைதிலியை மேலே தூக்கினோம். 30 நிமிடங்கள் போராட்டத்துக்குப்பிறகு உயிருடன் மைதிலி மீட்கப்பட்டார். கிணற்றுக்குள் விழுந்ததில் மைதிலியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மைதிலியை உயிரோடு காப்பாற்றியதைப் பார்த்தவர்களும் மைதிலியின் உறவினர்களும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.