மதுரை நகரில் நடக்கும் குற்றங்களை பதிவு செய்யும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ‘ஷேர்’ செய்யக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளது.
‘மூன்றாவது கண்’ என்றழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், நடந்த சம்பவம் குறித்து அறியவும் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கொள்ளை, கொலை நடந்தால் அதுகுறித்த கேமரா பதிவுகள் உடனடியாக சமூக வலை தளங்களில் பரவுகிறது. இது விசாரணைக்கு இடையூறாக இருப்பதாக கருதி சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் சசிமோகன், கேமரா பதிவுகளை ‘ஷேர்’ செய்யக்கூடாது என காவல்துறையினரை எச்சரித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல் பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடைக்கும் கேமரா பதிவுகளை காவல்துறையினர் வாட்ஸ் ஆப் குரூப்பில் ‘ஷேர்’ செய்கின்றனர்.
இது கண்டிக்கத்தக்கது. செய்யக்கூடாதது. இது சாட்சிகளை கலைத்த குற்றமாக கருதப்படும். எதிரிகளுக்கு வாய்ப்பாக மாறக்கூடும். ஏற்கனவே வழக்கறிஞர் சாமி சம்பந்தப்பட்ட கேமரா பதிவுகளை ‘ஷேர்’ செய்த காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே இனியும் ஷேர் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது சாட்சியை கலைத்ததற்காக சட்ட நடவடிக்கையும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார்.