கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த முதிய தம்பதிகளான சண்முகவேல் & செந்தாமரை ஆகியோரை நள்ளிரவில் தாக்கி கொள்ளையடிக்க வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தங்களைத் தாக்கி கொள்ளை அடிக்க வந்த இருவரை தம்பதியர் இருவரும் சேர்ந்து விரட்டியடித்து தமிழகத்தின் வீர தம்பதிகள் ஆயினர். அவர்களுக்கு உடனே சுதந்திர தினத்தில் அரசு சார்பில் வீர தீரச் செயலுக்கான பதக்கமும் வழங்கப்பட்டது.
பின்னர் இது தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப் பட்டு வந்தது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸார் திணறினர்.
தற்போது அந்த வழக்கில் பாலமுருகன் (30), பெருமாள் (51) என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலமுருகன் கீழக் கடையத்தைச் சேர்ந்தவர். பெருமாள் சவலப்பேரியை சேர்ந்தவர்.
இவர்கள் கைது செய்யப் பட்டது குறித்து, இன்று பகல் 12 மணி அளவில், நெல்லை மாவட்ட எஸ்.பி., அருண் சக்தி குமார் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கைதான இருவரும் பழைய குற்றவாளிகள் என்றும், இந்த இருவரும் சம்பவம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டை பார்வையிட்டு கண்காணித்து வந்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு, செந்தாமரையின் கழுத்தில் இருந்து 35 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். திரும்பும் வழியில் ஒரு பீடி சுற்றும் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
பிடிபட்ட பழைய குற்றவாளியான பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன. நெல்லை தவிர மற்ற மாவட்டங்களிலும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று கூறினார் எஸ்.பி., அருண் சக்தி குமார்