தமிழகம், புதுவையில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
வடமேற்கு திசை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சென்னை எழும்பூர், மெரீனா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.
கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
முன்னதாக,சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தென் மேற்கு வங்கக்கடல் தெற்கு இலங்கைக்கு அப்பால் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளன.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் மாலத்தீவு லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை நிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது!