சென்னை ராணி சீதை மன்றத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு கெட்டது என்னாலேதான் என்று கூறி, ஆர்.எம்.வீ.,யிடம் தாம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர்., குறித்து தனது நினைவலைகளை இந்த விழாவில் பேசும்போது பகிர்ந்து கொண்ட அவர், ‘’அண்ணன் ஆர்.எம்.வீ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது ஆர்.எம்.வீ. கிட்டத்தட்ட சிஎம் மாதிரி செயல்பட்டார். ஆனால் அவரே சிஎம் ஆக வேண்டியதை கெடுத்தது நான் தான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் அப்போதே சிஎம் ஆகி இருந்தால் இந்த நாட்டில் இவ்வளவு கேவலம் நடந்திருக்காது.
அதற்கு பின் ஒரு சந்தர்ப்பம். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தம், ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஆதாரங்களுடன் எம்.ஜி.ஆரிடம் வந்தார். புரட்சித் தலைவரும் ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்து விட்டார். அப்போது தலைவர் அங்கிருந்த என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் தனியாக பேச வேண்டும் என்று சொன்னேன். மாடிக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு மணி நேரம் அவருடன் பேசினேன். கீழே இறங்கி வரும்போது அண்ணன் ராகவானந்தம் என்னிடம், ’’கட்சியையும் நாட்டையும் கெடுத்த பாவத்திற்கு நீ ஆளாகிவிட்டாய்’’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.
இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.