
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புதுவை மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
விஷவண்டு கடித்ததால் உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.
புதுவை அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன், நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றுபோது விஷ வண்டு கடித்து மயக்கமடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தமனின் மறைவு புதுச்சேரிக்கு மட்டுமின்றி அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பதவி வகித்து வந்தவர் முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன். மணவெளியில் வசித்து வந்த இவர், புதுச்சேரி – தமிழக எல்லையான ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.
அப்போது வயல் வெளியில் சுற்றித்திரிந்த விஷத் தன்மையுள்ள கடந்தை வண்டு புருசோத்தமனை கொட்டியதால் அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைகாக விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 5 மகள்களும் உள்ளனர். புருஷோத்தமன் 2014-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.
அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். புருஷோத்தமன், மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடதக்கது.