சென்னை:
சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதை அடுத்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. மாநகர பஸ்களை பணிமனைகளில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், பேருந்துகள், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மதியத்துக்கு முன்பாக, பள்ளிகள் திடீரென விடுமுறை அறிவித்தன. முன்னதாகவே தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு முற்பகலே பெற்றோருக்கு பள்ளிகளில் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டதால் பள்ளிகள் முன் கூட்டம் அதிகரித்தது.
பிற்பகலில் பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதித்ததால், பலரும் சாலைகளில் காத்துக் கிடந்தனர். எங்கும் பேருந்துகள் எதுவும் ஓடாததால் கூட்டம் பலர் நடந்தே செல்வதைக் காண முடிந்தது. இதனால் பணிக்குச் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் திருவல்லிக்கேணி, பீச் ரோடு, ராயபுரம், உள்ளிட்ட வட சென்னையில் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது.