
மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க திறப்பு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அவர், ‘மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, உலகளவில் புகழ்பெற்ற மாணவர்களாக உருவாக வேண்டும்.
செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் திறமையான மாணாக்கர்கள் உள்ளனர்.
அதேபோன்று நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வருகிறது.
413 மையங்களில் 21 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் 15 நாட்கள் இலவச பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும், பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறை இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு விருப்பமான துறைகளில் சிறந்துவிளங்க வேண்டும்’ என்று பேசினார்.