
பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர்கள் சரவணன், அன்பரசி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கணவன் மனைவி இருவருமே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.
அன்பரசியை மீட்க முடிந்த நிலையில், குழந்தை மேகனாஸ்ரீயை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் சரவணனின் மனைவி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கணவன் சரவணன் அதே கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் இருவரும் நாள்தோறும் மணிக்கணக்கில் செல்போனிலும் வாட்சப்பிலும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார் அன்பரசி.
இருவரது உறவுக்கு இடையூறாக இருந்ததால் தம்மை கொல்ல திட்டமிட்ட கணவர், குடிபோதையில் குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அப்பெண் மீட்கப்பட்டுவிட குழந்தை மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்