தாமிரபரணி ஆற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்லாவிட்டால், தாமிரபரணியை ஆற்றை வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் தாமிபரணி ஆற்றை வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடியும். இதனால் தாமிரபரணியை பாதுகாக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது? எங்கெங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன? கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி விசாரணையை மார்ச் 16-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.