சென்னையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் கண்மூடித் தனமாக அடித்ததில் மாணவனின் கண் பார்வை பறிபோய் விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் ரேகா – வேலு தம்பதி. இவர்களின் 13 வயது மகன், மேடவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் வகுப்பறையில் ஆசிரியை உமா இரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் பல முறை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இரும்பு ஸ்கேலால் தலையில் அடிக்கப் பட்டதால், அந்த மாணவன் தொடர்ந்து தலைவலிப்பதாகக் கூறியபடி இருந்துள்ளான். அந்த மாணவனை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்த போது, அவனுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழும்பூர் கண் மருத்துவமனையில் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நரம்பில் பாதிப்பு இருப்பதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், தலையில் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவனுக்கு பார்வை கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியதயாக மாணவனின் தாய் கண்ணீருடன் புலம்பியுள்ளார்.
தங்கள் மகனுக்கு நேர்ந்த கதி குறித்து எடுத்துக் கூறியும், இதுவரை பள்ளி நிர்வாகமோ, தாக்கிய ஆசிரியரோ இதுவரை மாணவரை வந்து பார்க்கவுமில்லை, தகுந்தவிளக்கமும் அளிக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் பெற்றோர், மீண்டும் உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மேடவாக்கம் அரசுப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும், ஆசிரியர் தலையில் அடித்து மாணவன் பார்வை நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.