நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருக்கும் மக்கள் சிலருக்கு, வழக்கம் போல் மது அருந்தி பழக்கப்பட்டு விட்டதால், மது கிடைக்காமல் அல்லது குடிக்காமல் இருப்பது பெரும் உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
எப்பாடு பட்டாவது மது வாங்கி வந்து அல்லது எடுத்து வந்து குடித்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதால், டாஸ்மாக் கடைகள் மீதே கண்ணாக இருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த எண்ணத்தால், டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபானங்கள் திருடிய சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை பகுதியில் திருட்டில் ஈடுபட்ட அண்ணன் ரமேஷ், தம்பி வேலு ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மது கிடைக்காத நிலையில், போதைக்காக எதையாவது கலந்து குடித்து உயிரை விட்ட இருவர் குறித்து பரிதாபம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை கிராமமான கோட்டைப் பட்டனத்தில் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மது கிடைக்காததால் ராஜா, அருண், அன்வர் ஆகிய 3 பேர் சேவிங் லோசனை குடித்தனர். இதை அடுத்து மூவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா, அருண் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனையில் அன்வருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.