கொரோனா அச்சத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
அதுமட்டுமில்லாமல், குடும்ப பிரச்னைகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் சொத்துக்காக முதியவரை அவரது மகன் மற்றும் மருமகளே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராசு. இவரிடம் அவரது மகன் சொத்துக்காக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது தோட்டத்திலேயே படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலைக்கு சம்பந்தமான மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ராசுவின் மகன் கருப்பையாவும் மருமகள் தருமாவும் அவர்களது நண்பரான அய்யனார் என்பவரும் இணைந்து, திட்டம் தீட்டி சொத்துக்காக அவரை படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.