மதுரையில் பிள்ளைகள் கைவிட்டதால் மனமுடைந்த கொரோனா நோயாளி தற்கொலை!
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை பெற்ற பிள்ளைகளே கைவிட்டதால் கொரோனா முகாமில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா அறிகுறியுடன் இருந்துள்ளார். இதனால் அவருடைய பிள்ளைகளே அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சாலையோரங்களில் சுற்றித்திரிந்த அவரை சுகாதாரத்துறையினர் பார்த்து, அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்தனர். சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியின் கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், கொரோனா தொற்றும் உறுதியானதால் மனமுடைந்த முதியவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
படுகாயமடைந்த முதியவரை மதுரையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முதியவர் உயிரிழந்தார்.
பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.