சென்னை: கட்சித் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை பாடிகுப்பம் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் (40). தி.மு.க. பிரமுகரான இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் முரளிக்கும் இவருக்கும் கட்சியில் யார் பெரியவர்கள் என்பது தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஞாயிறு அன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் முரளியை டேவிட் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி, நேற்று தெருவில் நடந்து சென்ற டேவிட்டை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் டேவிட்டின் முதுகு, கை ஆகிய இடங்களில் கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த டேவிட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியைத் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari