கொரோனா காலத்தில் வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் வந்தே பாரத் (Vande Bharat) திட்டத்தைத் துவக்கி கட்டம் கட்டமாக மக்களை நாட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றது.
எனினும், இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் உலகமே உழன்றிருக்கும்போதும், சிலர் குறுக்கு வழியில் பணம் ஈட்டுவதற்கான எந்த வாய்ப்பையும் விடுவதாக இல்லை.
பேஸ்ட் வடிவத்தில், 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2.6 கிலோ தங்கம், சமீபத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் விமானத்தில் கோயம்புத்தூர் வந்த தம்பதியரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
DRI அதிகாரிகள், ஒரு உதவிக்குறிப்பில் செயல்பட்டு, இந்த விமானங்களில் வரும் பயணிகளைக் கண்காணித்தார்கள். இந்த தம்பதியினர் கிரீன் சேனலில் இருந்து வெளியே வந்தபோது இவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களால் உறுதியான பதிலை அளிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் மீதான சந்தேகம் அதிகாரிகளுக்கு இன்னும் அதிகரித்தது. பின்னர் அவர்கள் முறைப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த தம்பதி முதலில் தங்களிடம் தங்கம் இருப்பதை மறுத்தனர். எனினும், அவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், அவர்களது உள்ளாடைகளில் சில பாக்கெட்டுகள் தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவற்றில் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2.61 கிலோகிராம் தங்கம் பசை (Gold Paste) வடிவில் பதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஜோடி இரண்டு வாரங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்து, கோவிட் சோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட (Quarantine) நிலையில் இருந்தனர்.
செவ்வாய்க்கிழமை அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னர், அவர்கள் 1962 சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் சம்மன் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்