வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த முதல் நாளிலேயே சென்னையில் மழை கொட்டி தீர்த்தது
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேகமூட்டமாகவும் சில நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
நள்ளிரவில் வெகு நேரம் நீடித்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. சுரங்கப்பாதைகள் பலவற்றில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து அந்தப் பகுதிகளில் முற்றிலும் முடங்கிப் போனது. மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை நகரின் பல பகுதிகளிலும் மக்கள் கவனத்துடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வ மழை அளவு படி சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது செங்குன்றம் பகுதியில் 128 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு படி சென்னை நகரில் நவம்பர் 2017 க்கு பிறகு பெய்த அதிகபட்ச மழை அளவு இது தான் என்கின்றனர்.