சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு செய்வதற்கான கடைசி நாளான நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நாளில் பாஜக., வேட்பாளர் கரு.நாகராஜன், விஷால், தீபா ஆகியோர் முக்கியமானவர்கள்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிச.21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், திமுக, அதிமுக, பா.ஜ.க., மற்றும் சுயேட்சைகள் தினகரன், விஷால், தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடும் அவர், வேட்புமனுவில் தன்னிடம் ரூ.1.06 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெ., அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், நகைகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த எந்த தகவலையும் தீபா குறிப்பிடவில்லை.
தேர்தல் தொடர்பாக டிச.6 முதல் பொது மக்கள், பொதுப் பார்வையாளரிடம் புகார் கூறலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சுயேட்சைகள் மனுத்தாக்கலில் கண்ட சுவாரஸ்யம், மனுத்தாக்கல் செய்தவர்களில் அதிகம் பேருடைய பெயர்கள் தினகரன், தீபா, விஷால் என்று இருந்ததுதான்!
வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அதிகம் பேர் ஆகிவிடுவார்கள் போல் உள்ளதே என்று பலரும் அங்கே காதைக் கடித்தனர்.