கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவி கடந்த வாரம் உயிரிழந்ததற்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை என மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிஹரிணி (26). இவர் பிப்.5-ல் கொரோனா தடுப்பூசி போட்டார். கடந்த வாரம் அவருக்கு உடல் வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. அவரது கணவரும் அதே கல்லூரியில் படிக்கிறார். அவர் மனைவிக்கு வலி நிவாரண ஊசி போட்டார். ஆனால், உடல்நிலை மோசமாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
தடுப்பூசி போட்ட பிறகு அந்த மாணவி வலி நிவாரண ஊசி போட்டதாலேயே இறந்ததாக அவரது மரணம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறியதாவது:
மாணவி ஹரிஹரிணி கொரோனா தடுப்பூசி போட்ட ஒரு மாதம் கழித்து இறந்தார். அவரது மரணத்துக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை. அதற்கான ஆவ ணங்கள் எங்களிடம் உள்ளன.
மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளோம். நாங்கள் நலமாக உள்ளோம். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது: மாணவி எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் வலிநிவாரண தடுப்பூசியை சுகாதாரத் துறையில் தடை விதித்துள்ளோம்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், பொதுவாக வலி நிவாரண ஊசிகளை தவிர்க்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.