சிவகங்கை: சிவகங்கை அருகே காதலனுடன் சென்றதால் தன் மகளைக் கௌரவக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் (47). இவரது மகள் தமிழ்ச்செல்வியுடன் (19) அதே ஊரைச் சேர்ந்த பூமிநாதன் (27) என்பவருக்கு காதல் இருந்துவந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந் நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், வெளியூரில் பூமிநாதனுடன் இருந்த தமிழ்ச்செல்வியை போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன் ஆஜரானார். தன் மகள் தமிழ்ச்செல்வியை தானே கௌரவக் கொலை செய்துவிட்டதாக அவர் கூறினார். அதன் பேரில் அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கடந்த 3-ந்தேதி இரவில் நான் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது வீட்டில் படுத்திருந்த போது எனது மகளைக் காணவில்லை. நான் வெளியே வந்து பார்த்தேன் அப்போது அவர், வயல்காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். நான் அழைத்தும் அவள் நிற்கவில்லை. இப்படி மீண்டும் மீண்டும் என்னை அவமானப்படுத்துகிறாளே என ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உடனே அவளைப் பின்தொடர்ந்து சென்றேன். அங்கே இருந்த கட்டையால் ஆத்திரம் தீர அடித்தேன். அதில் அவள் இறந்துவிட்டாள். பின்னர் அவளது உடலை மண்ணெண்னை ஊற்றி எரித்து விட்டேன் என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் மகள் கௌரவக் கொலை: சிவகங்கையில் சம்பவம்
Popular Categories