சென்னையில் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிமேட் (Demat) கணக்கு துவங்க நியமிக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஹரிகுமார்.
இவர் அவ்வங்கிப் பணியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும், தொடர்ந்து அவ்வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் வங்கி ஊழியர் போல் செயல்பட்டு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் பாடுபட்டு சேர்த்த ஒய்வு ஊதியங்கள் மற்றும் சேமிப்பு பணத்தை சில தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தான் உதவுவதாகவும் கூறி அவர்களின் காசோலைகளை பெற்று, அதில் அவராகவே அந்த நிதி நிறுவனங்கள் போன்ற பெயர்களில் விருகம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் வங்கி கணக்கில் வரவுவைத்துள்ளார்.
அவர்களிடம் பெற்ற பணத்தை முதலீடு செய்ததற்கு சான்றாக அவர்களிடம் போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகளையும் கொடுத்து வந்துள்ளார்.
அவ்வாறு நிரந்தர வைப்புத் தொகை கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்கள் சிலர் தங்களுடைய முதிர்வுத் தொகையை திரும்ப கேட்கும்போது, அவர்களிடம் மேலும் இரண்டு வருடங்களுக்கு வைப்புத் தொகையை புதுப்பிக்குமாறு ஹரிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் வாடிக்கையாளர்கள் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்த ஹரிகுமார் சுயலாபத்தை மட்டுமே கருத்தில்கொண்டு சொன்னபடி முதிர்வுத் தொகையை திரும்ப கொடுக்காமல் சுமார் 10த்திற்கு மேற்பட்ட முதியோரை தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இது தொடர்பாக சந்தேகமடைந்த சிலர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த ஹரி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முதியோர்களை ஏமாற்றியிருப்பது தெரியவரவே ஹரிகுமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் ஹரிகுமார் இதுபோன்று மேலும் பலரை ஏமாற்றி 4 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் இவ்வழக்கில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள், நிதி நிறுவன முத்திரைகள் உள்ளிட்டவைகளும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.