மதுரையில் வளர்ப்பு நாயை திருடிய இளைஞரை சிசிசிடி காட்சியின் மூலம் கைது செய்த போலீசார், நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த ஆவின் ஊழியரான சரவணகுமார், அவரது வீட்டில் புறா , நாய், ஆடு என பல வீட்டு வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வந்தார்.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி மதியம், அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கண்ணி இனத்தை சேர்ந்த 8 மாத நாய் குட்டி காணாமல் போனது.
பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சரவணகுமாரின் வீட்டருகே சலூன் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் TN-58 – BA 9858 என்ற எண்ணுடைய டாட்டா ஏஸ் (குட்டி யானை) வாகனத்தில் நாய் திருடி செல்லப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.
வாகன எண்ணை வைத்து சரவணகுமார் தேடி வந்த நிலையில், நேற்று (ஜூலை 20) மேலமடை சிக்னல் அருகே சிசிடிவியில் பதிவான வாகனம் வந்ததைப் பார்த்து உடனடியாக வாகனத்தை நிறுத்தி, போலீசாரையும் உதவிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாகனம் மதுரை ஆழ்வார்புரம் கருப்பையா காம்பவுண்டில் குடியிருந்து வரும் அர்ஜூன் என்பவரது வாகனம் என்பதும், நாய் வளர்க்கும் ஆசையில் நாய்க்குட்டியை அவரே தன்னுடைய வாகனத்தில் திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
நாயின் உரிமையாளர் சரவணகுமார் பேசுகையில்,
“8 மாத குட்டி என்பதால் இதுவும் குழந்தை போன்றது தான். எனவே, யார் அழைத்தாலும் பின்னாடியே செல்லும் குணம் கொண்டது இந்த நாய்.
மேலும், மதிய உணவு வேளையில் நான் சாப்பிடும் போது நாயையும் சாப்பிட அவிழ்த்து விடுவது வழக்கம். எப்போதும், அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் வீடு திரும்பி விடும். ஆனால், அன்று அவிழ்த்து விடப்பட்ட நாய் வெகு நேரமாக வீட்டிற்கு வரவில்லை.
அதன் பின்னரே அருகிலிருந்த சலூன் கடையின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து நாய் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் ஒரு உறுப்பினர் போல வளர்க்கப்பட்ட நாய் இல்லாமல் இத்தனை நாட்களாக மனம் தவித்த நிலையில், நாய் கிடைத்த பின்னரே குடும்பத்தில் அமைதி திரும்பியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
இதையடுத்து, நாயை திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் அவர் திருடி சென்ற நாய் குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டு, நாயை திருடிய குற்றத்திற்காக அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார்.