கோவையில் வாகன ஓட்டியிடம் போக்குவரத்து பெண் போலீஸ் லஞ்சம் வாங்கும், ‘வீடியோ’ வைரலான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.
கோவை, பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து பிரிவில் போலீசாக பணியாற்றி வருபவர் பாப்பாத்தி, 40. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பெரியகடை வீதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.கே., மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டார். ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இதை ஒருவர் மொபைல்போனில் ‘வீடியோ’ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி, போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.
விசாரணையில், அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பெண் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து வீடியோ காட்சிகள் அடிப்படையில் பெண் போலீசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோவில் லஞ்சம் கொடுப்பவர் யார், எதற்காக, எத்தனை ரூபாய் பணம் கொடுத்தார் என்று விசாரிக்கப்படுகிறது’ என்றார்.