சென்னை: சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை பாலம் அருகே, சி.பி.ராமசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்தவுடன் ரசீது வரும் இடத்தில் குறி வைத்து இரும்புக் கம்பியால் உடைத்ததில் ஏ.டி.எம். இயந்திரத்தின் மேல் பகுதி லேசாக உடைந்துள்ளது. இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாதது தெரிய வந்தது. இதனைப் பயன்படுத்தியே கொள்ளையர்கள் துணிச்சலுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Popular Categories