சிவகிரியில் வயலுக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் கரும்புகளை நாசம் செய்தன.
நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் வயல்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. இங்கு நெல், கரும்பு உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை காட்டு யானைகள் சிவகிரி பகுதியிலுள்ள வயலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை காலால் மிதித்தும், கரும்புகளை துதிக்கையால் முறித்தும் சேதப்படுத்தின.
இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.