சென்னை:
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடி சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணை இன்று தமிழக அரசால் வெளியிடப் பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப் படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் நெமிலி, அரக்கோணம் தாலுகாக்கள் ஆகியவையும் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைக்கு உட்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆயிரத்து189 சதுர கிலோ மீட்டர் பரப்பாக இருந்த சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைப் பரப்பு, 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைப் பரப்பு சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆயிரத்து 709 சிறு கிராமங்கள், சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விரிவாக்க திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துகளை 2 மாதங்களுக்குள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், சென்னைப் பெருநகர திட்டப் பகுதி விரிவாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.