மதுரை:
காது குத்து நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மொய் செய்யாததால் டார்ச்சர் கொடுத்தார் செல்லூர் ராஜூ என்று மதுரை வழக்கறிஞர் கிறிஸ்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப் பட்ட விஷயமாக இருந்தது, தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்பத்தில் நடைபெற்ற காது குத்து விழா. இந்த விழாவில் போட்டி போட்டுக் கொண்டு முதல்வரும் துணை முதல்வரும் கலந்து கொண்டனர். குறிப்பாக, தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச் செழியனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அவர் முதல்வர், துணை முதல்வருடன் பேசினார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியாயின.
இந்நிலையில், தனது பேரன்களின் காது குத்து விழாவுக்கு மொய் செய்யாத காரணத்தால் தமக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ டார்ச்சர் கொடுத்தார்; அதனால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என மதுரை பெண் வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இது மதுரையில் மட்டுமல்லாது, அரசியல் மட்டத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.