சென்னை:
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார். இது குறித்து பரபரப்பாக உடனே செய்திகளும் வெளியானது. ஆனால் அவ்வாறு வந்த நபர் போலியான நபர் என்று தெரியவந்தது. இப்படி, போலியான ஆவணங்களுடன் ஜெ.தீபா வீட்டுக்கு வந்து ஏமாற்ற முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜெ.தீபா, சென்னை தியாகராய நகரில் உள்ள சிவஞானம் சாலையில் வசித்துவருகிறார். இவரது வீட்டுக்கு சனிக்கிழமை காலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். தன் பெயர் மித்தேஷ்குமார் என்றும், தான் வருமான வரித் துறை உதவி ஆணையர் என்றும் அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டார். பின்னர், வீட்டில் சோதனையிடப் போவதாகக் கூறிய அவர், அதற்கான ஆவணத்தையும் காட்டியுள்ளார்.
அப்போது ஏன் இந்த சோதனை என்று மாதவன் அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், பேரவையில் பலரிடம் பதவி தருவதாக பணம் பெற்று கொண்டு ஜெ.தீபா ஏமாற்றியதாக காவல் துறை ஆணையருக்கு புகார் வந்துள்ளது. மேலும் பல கோடி ரூபாயை தீபா பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் சோதனை நடத்த வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், மாதவனுக்கும் மித்தேஷ் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாம்பலம் உதவி ஆணையர் செல்வம், ஜெ.தீபா வீட்டுக்குச் சென்று, மித்தேஷ் குமாரிடம் விசாரித்துள்ளார். அப்போது சந்தடி சாக்கில் அந்த நபர், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அப்பகுதியில் தயாராக இருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.
கையில் கிடைத்தும் அந்த நபர் தப்பிவிட்டதால், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் சாரங்கன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
மாம்பலம் காவல் ஆய்வாளர்கள் பிரபு, சேகர் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதனால் பயந்து போன போலி அதிகாரியாக நடித்த இளைஞர் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் மாம்பலம் காவல் நிலையத்தில் திடீரென சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீபா ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும் மாம்பலம் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
சரண் அடைந்த இளைஞரின் பெயர் பிரபாகரன் (31) என்றும் அவர், புதுக்கோட்டை அருகே உள்ள கோச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், விழுப்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திருமணமாகாத இவர், புதுச்சேரியில் கணேஷ் மெஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது.
பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தன்னை மாதவன்தான் வருமான வரித் துறை அதிகாரியாக நடிக்கச் சொன்னார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தனது பேச்சு அடங்கிய வீடியோ ஒன்றையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மாதவன்தான் தன்னை நடிக்கச் சொன்னார் என்றும், இது ஒத்திகைதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாதவனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இளைஞர் பிரபாகரன் மீது 419 ஐ.பி.சி. (ஆள் மாறாட்டம்) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதவன் மீதும் அடுத்த கட்டமாக வழக்குப் பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாதவன் சொன்ன மாதிரிதான் நடித்தேன் என்று பிரபாகரன் கூறியதால், எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டது என்று போலீஸார் குழம்பிப் போயுள்ளனர். மாதவனும், பிரபாகரனும் இணைந்து தீபாவை மிரட்டி பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டார்களா? அல்லது பிரச்னை ஆனதும் பிரபாகரன், மாதவனை மட்டும் மாட்டி விடுகிறாரா? என குழம்பியுள்ளனர் போலீஸார்.
மேலும், சோதனை செய்யும் சாக்கில், தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற ஏதேனும் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.
தீபா, அரசியல் ரீதியாகக் களம் இறங்கி, பேரவை தொடங்கிய பிறகு, தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், தீபாவின் வீட்டில் இருந்து வெளியேறிய மாதவன் மீண்டும் இப்போதுதான் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் தீபாவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட மாதவன் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எப்படியோ, தீபா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தீபா- மாதவன் விவகாரம் மீண்டும் பூதாகரமாகிவிட்டது.