மதுரை:
தமிழகம் பெரியார்வாரின் மண், இது பெரியார் மண் அல்ல என்று, பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
மதுரையில் பாஜக., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலைக் கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம். இது பெரியார் வளர்த்த மண் இல்லை, பெரியாழ்வார் வளர்த்த மண். இது அண்ணா வளர்த்த தமிழ் இல்லை, ஆண்டாள் வளர்த்த தமிழ்.
தமிழகத்தில் நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியைக் கொண்டு வந்து ஆன்மிக அரசியலை உருவாக்க முடியும். நாத்திகம் பேசிக் கொண்டிருக்கும் இம்மண்ணில் யார் ஆன்மிகம் பேசினாலும் அதனை பாஜக வரவேற்கும். ஆன்மிக அரசியலுக்கு முதல் முதலில் வித்திட்டதே பாஜக.,தான். எனவே புதிதாக ஆன்மிக அரசியல் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று கூறினார்.
தொடர்ந்து, ப.சிதம்பரம் மத்தியில் பதவியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்? மு.க. ஸ்டாலினால் கட்சிக்கே தலைவராக முடியவில்லை, அவர் எப்படி முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டுமென்றால் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்.