பாஜக நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் எதிரொலி- பாஜக நிர்வாகியை தாக்கியவர்கள் நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம் அருகே திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் துரை தனசேகரன் (வயது 46), பா.ஜனதா மாநில நிர்வாகி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றார். கானகோயில்பேட்டை என்ற பகுதியில் சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். உடனே தனசேகரன் காரைவிட்டு இறங்கி ஓடினார். அப்போது அந்த கும்பல் அவரை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த தனசேகரன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவ இடத்துக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர் புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்றார்.
இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற தனசேகரனை சந்தித்து ஆறுதல் கூறினார். தைரியமாக இருங்கள். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்றார்.
அதன்பிறகு அண்ணாமலை கூறுகையில், தனசேகரன் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட தமிழக பா.ஜனதா நிர்வாகி தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனசேகரன் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் நள்ளிரவு போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் வக்கீல் அகமது பாஷா (வயது 33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான்(20), இப்ராகிம் (35) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரையும் இன்று காலை போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர்.