டிடிவி தினகரன் இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகம் செய்தார். கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும் கட்சிக் கொடியில், அதிமுக., கொடியில் அண்ணா படத்துக்கு பதிலாக ஜெயலலிதா படத்தை வைத்து, கறுப்பு வெள்ளை சிகப்பு என வைத்துள்ளார். கட்சியில் திராவிட என்ற சொல் வராமல், அம்மா மட்டும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மதுரை மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ரான, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று கூறினார்.