சென்னை: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த ராமராஜ்ய ரத யாத்திரை, 5 மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்தது. இது, ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத் திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் என சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விழிப்பு உணர்வைத் தூண்டும் வகையில் இந்த ரத யாத்திரை கிளம்பியது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழைந்து, ராஜபாளையம் வந்து, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வருகிறது. மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் இந்த ரதம், ராமேஸ்வரம் செல்கிறது.
சிவராத்திரி அன்று அயோத்தியில் துவங்கிய இந்த யாத்திரை, 41 நாட்கள் 5 மாநிலங்களைக் கடந்து, வரும் மார்ச் 25 ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. கேரளத்தில் இருந்து தமிழகம் வந்த இந்த ரதயாத்திரை மூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், எனவே அனுமதி வழங்கக் கூடாது என திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின. நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து வெளிநடப்புச் செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை, தமிழகம் வந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசிய போது…
ரத யாத்திரையால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே ஸ்டாலின் பேசிய சில பேச்சுகள் கண்ணியமற்ற வகையில் இருப்பதாகக் கூறி, அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப் பட்டன. பின்னர், இந்த விவகாரத்தில் பதில் அளித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஐந்து மாநிலங்களின் வழியாக வந்த ரதத்தினால் எந்தப் பிரச்னையும் எழவில்லை. இங்கு மட்டும் எழும் என்று சொல்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டது என்பதை கூறினார் முதல்வர். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும், ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ரத யாத்திரை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி இருக்கையில் இருந்து ஆவேசமாக எழுந்து கோஷங்களை எழுப்பிய படி அவையின் மையப்பகுதிக்கு வந்து தொடர் முழக்கம் எழுப்பினார். அவரது கடும் ஆட்டத்தைக் கண்டு, ஸ்டாலின் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருந்தார். பின்னர் திமுக.,வினரும் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்று அவை நடவடிக்கைகள் தொடர வழி செய்யுமாறும் சட்ட மன்ற அவைத்தலைவர் தனபால் கோரினார். ஆனால், திமுக.,வினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஏற்கெனவே, அவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பில் ஈடுபடுவது ஸ்டாலின் வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து உருப்படியாக பயனுள்ள விவாதம் எதிலும் கலந்து கொள்ளாமல், எப்போது பார்த்தாலும் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தார். இன்று அவராக வெளியேறாவிட்டாலும், தனது செயல்பாடுகளால் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பின் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.