சேலம் : சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சேவையை இன்று தொடங்கி வைத்தனர். விமான சேவை தொடங்கிய முதல் நாளே கட்டணத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
1993ஆம் ஆண்டு சேலத்தில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நகரங்களை இணைக்கும் ’உடான்’ திட்டத்தின் மூலம் சேலத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் 50 நிமிடத்தில் பயணிக்கலாம். இதற்கு 1499 ரூபாய் பயணக் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ள இந்த விமான சேவையை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். இதற்காக சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்தில் எடப்பாடி பழனிசாமி, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் சேலம் விமான நிலையத்துக்கு வந்தனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் விமான நிலையம் தொடங்கப் படுவதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர்கள் பயன் பெறுவர் என்றார். மேலும், விரைவில் சேலம் விமான நிலையம் விரிவாக்கப்பட்டு பெரிய விமானங்களும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விமான டிக்கெட்டுகளையும் முதல்வர் வழங்கினார்.
இதை அடுத்து காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு முதல் விமானம் புறப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ட்ரூஜெட் என்கிற நிறுவனம் இந்த விமானங்களை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளது. விரைவில் சேலத்தில் இருந்து திருப்பதிக்கும் விமான சேவை அளிக்கப்படும். இதன் மூலம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் சென்னைக்கு 50 நிமிடங்களில் பயணிக்க முடியும்.
இந்நிலையில், சேலம் – சென்னை விமான கட்டணத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சேலம் – சென்னை முதல் 30 பேருக்கு மட்டுமே ரூ. 1,499 கட்டணம் என்று அறிவிப்பால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 72 பயணிகளில் மீதமுள்ளவர்களுக்கான விமான கட்டணம் ரூ.2,300 முதல் 2,700 வரை வசூல் செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.