Home உள்ளூர் செய்திகள் பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் முனைவர் அ.அறிவொளி காலமானார்

பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் முனைவர் அ.அறிவொளி காலமானார்

திருச்சி: பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான முனைவர் அ.அறிவொளி செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.

1986ல் வழக்காடு மன்றம் என்ற புதிய முறையைத் துவக்கி அதன் பரிணாமமாக பட்டி மன்றங்கள் புகழ்பெறக் காரணமாக அமைந்தவர் அ.அறிவொளி. மிகச் சிறந்த இலக்கிய, ஆன்மீக சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர். பட்டிமன்றங்களின் நடுவர் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக அமைந்து, பட்டிமன்றங்களை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றவர். திருச்சியைச் சேர்ந்த அறிவொளி, தமிழார்வம் கொண்டவர், தமிழறிஞர் என்றாலும், அவர் முனைவர் பட்டம் பெற்றது என்னவோ மாற்று மருத்துவத்தில். டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அறிவொளி.

அண்ணாமலை பல்கலைக்கழகம், பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், திருக்கோயில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற பெற்ற கோயில்கள், சிவத் தலங்களுக்குச் சென்று அவற்றின் வரலாறுகளையும் சிறப்புகளையும் ஆராய்ந்து பதிவு செய்து 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் பட்டம், கபிலவாணர் உள்ளிட்ட விருதுகள் பல பெற்ற இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஹனிபா காலனியில் வசித்து வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், செவ்வாய்க் கிழமை நேற்று இரவு காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறும் என்று குடும்பத்தார் தகவல் தெரிவித்தனர். தகவலுக்கு: 0431- 2315633

2 COMMENTS

  1. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version