ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்தார். அங்கு அவரை வரவேற்ற ஆலய நிர்வாகிகள், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, மரியாதை செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் தரிசனம் முடிந்து ஆளுநர் புரோஹித் விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகையைக் கண்டித்து, வழக்கம்போல் விருதுநகரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் தலைமையில் திமுகவினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த சிவகாசி சாலையில் திரண்டனர்.
ஆனால், ஆளுநர் விருதுநகருக்கு வரும் முன்னரே அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.