சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே சிறப்பாக செயல்படுகிறார், எவ்வளவு கடுமையான சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை விழா துவக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எல்லோரும் எளிதில் அணுகும் முதல்வராக உள்ளார். அமைச்சராக இருந்ததை விட முதல்வரான பிறகு அவர் மிக எளிமையாக இருக்கிறார்.
தமிழகத்தில் பலர் முதல்வர் கனவுடன் சுற்றுகின்றனர். முதல்வர் பொறுப்பு என்பது மிகக் கடுமையானது. இக்கட்டான சூழலிலும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர், தரக் குறைவாக தகுதியில்லாமல் பேசி வருகிறார். மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக எதிர்க்கட்சிகள் உள்பட எல்லாக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இருந்த போதிலும், முதல்வர் நல்ல விஷயங்களை மக்களுக்குச் செய்து வருகிறார்.
ஹஜ் பயணிகளுக்கு சலுகை ரத்து, முத்தலாக் பிரச்னை என இதர பிரச்னைகளிலும் இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் குரல் கொடுத்தனர். இதை யாரும் மறந்துவிடக் கூடாது.
மறைந்த முதல்வரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்று பேசினார்.