காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ரஜினி நடித்த காலா திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுதும் வெளியானது. கர்நாடகாவில் மறு நாளிலிருந்து வெளியானது. இந்தப் படம் அரசியல் பின்னணியில் வந்ததால், இருவேறு அரசியல் சார்பு இந்தப் படத்துக்கு ஏற்பட்டது. படம் வெளியிடும் முன் எதிர்த்தவர்கள், படம் வெளியானபின் ஆதரவு தெரிவித்த்னர். படம் வெளியாகும் முன் ஆதரவு தெரிவித்த கட்சியினர் படம் வெளியான பின்னர் முகம் சுளித்தனர்.
இப்படி இந்தப் படத்துக்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலி படத்தைவிட காலா மிகவும் குறைவாகவே வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாகவும், அதற்குக் காரணம், நிர்ணயிக்கப் பட்ட டிக்கெட் கட்டணங்களை விட முறைகேடாக வசூல் செய்திருப்பதுதான் என்கிறார்கள்.
ஆன்மிக உணர்வு அதிகம் கொண்ட மக்கள் நிறைந்த ஆந்திரத்தில், அடிதடி அமானுஷ்யனங்களை அதிகம் விரும்பும் மக்கள் அதிகம் நிறைந்த தெலுங்கு தேசத்தில், காலா போன்ற படங்கள் எடுபடுவது சற்றே கடினம் தான் என்பதை நிரூபித்திருக்கிறது காலா! படம், தெலுங்கிலும், ஹிந்தியிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதனிடையே, சென்னையைத் தவிர தமிழகத்தின் பல வெளியூர்களில் காலா வெளியான தியேட்டர்களில் படம் காலாவதியாகி, வேறு படத்தை மாற்றி திரையிட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலா, தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை என்று, காலா வெளியீட்டாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கூறுகின்றனர். ஆயினும், ரஜினிகாந்த்தோ, டார்ஜிலிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடவுளின் அருளால் தமிழ்நாடு, கர்நாடகா, வெளிநாடுகள் ஆகியவற்றில் காலா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தாம் நிஜ வாழ்வில் நம்புக் கடவுளைப் பற்றி விமர்சித்து படத்தில் நடித்து, கடவுள் அருளால் படம் வெற்றி அடைந்ததாக தேர்ந்த நடிகரான ரஜினியால் மட்டுமே கூற முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.
இந்நிலையில், தாம் அடுத்த படத்துக்காக டார்ஜினிலிங்கில் ஒரு மாதம் வரை தங்கியிருக்கப் போவதாகக் கூறியுள்ளார் ரஜினி.