நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சம்ப்ரோக்ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்திருந்தார்கள்.
வானமாமலை, ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 திவ்யதேசங்களில் 51வது திவ்யதேசம். புராண பெயர்கள்: நாங்குநேரி தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை(சீரிவரமங்கலநகர்) நாகணை சேரி
இறைவன் – தோத்தாத்ரிநாதன் இறைவி- ஸ்ரீதேவி,பூமி தேவி தீர்த்தம்- சேற்றுத்தாமரை தீர்த்தம்; பிரத்யட்சம் உரோம (ரிஷி) முனிவர். இது ஒரு சுயம்புத் தலமாகும். இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்று பல பெயர்கள் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம்,நரசிம்மபுராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது.
இந்தத் தலத்தில் 29.06.2018 இன்று காலை நடைபெற்ற சம்ப்ரோக்ஷண நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவு…
உரோம ரிஷி தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமக்ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்ததால் ஸ்ரீவரமங்கல நகர் எனவும், ஆதிசேஷன் இங்கு தவமிருந்து திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால் வானமாமலைஎனவும், இங்குள்ள குளத்தை நான் கு ஏரிகளாக வெட்டியதால்..நான் கு ..ஏரி…நாங்குநேரி எனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப்பகுதியில் அமைந்ததால் நான் கூர் ஏர் என்பது நாங்குநேரி ஆனது என்றெல்லாம் கூறப்படுகிறது
இங்கு இறைவனுக்கு தினமும் தைல அபிஷேகம் நடைபெறும்.அந்த எண்ணெய்யை எடுத்து இங்குள்ள நாழிக் கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.இந்நாழிக் கிணற்றில் உள்ள எண்ணையை உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவானமாமலை மண்டபத்திற்கு இதுவே தலைமைப் பீடமாகும்.நம்மாழ்வார் மட்டும் இத்தலம் பற்றி 11 பாக்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார். இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கே நடைபெற்ற குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் இருந்து…