சென்னை: சென்னை – சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டம் என்று கூறப்படுவது, கற்பனையான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மிகச் சிறந்த திட்டம். இதற்காக நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பசுமை வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமே பயன் பெறப் போவதில்லை. சேலத்தை ஒட்டி அருகில் உள்ள மற்ற மாவட்டங்களும் இதனால் பெரும் பயன் பெறும் என்றார்.
தனியாருக்கு சாதகமான திட்டம் இது என்று கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தாது வளங்களை வெட்டி எடுக்கும் தனியாருக்கு சாதகமான திட்டம் என்ற கேள்வி கற்பனையானது, அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக தவறான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. எந்த தனியாருக்காகவும் சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை அமைக்கப்படவில்லை. இந்த திட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.