சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், தனியார் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், கல்வியை வியாபாரமயம் ஆக்குதலைத் தடுத்தல், முறையாக சான்றிதழ் பெறாத பள்ளிகளை நடத்துவதற்கு தடை விதித்தல், உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று கூறினார் செங்கோட்டையன்.
தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி வழங்கினால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், பள்ளி நேரம் முடிந்தோ அல்லது விடுமுறை நாட்களிலோ நீட் பயிற்சி அளிக்கலாம் என்று கூறினார் செங்கோட்டையன்.
தொடர்ந்து, சிவ் நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய புதிய தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேரவையில் தாக்கல் செய்தார்.
மேலும், தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார்.