விருதுநகர்: எஸ்பிகே குழுமம் தொடர்புடைய இடங்களில் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடிபணம், 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் கூறினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே குழும உரிமையாளர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன் நாகராஜன் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், எஸ்பிகே குழும அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
அருப்புக் கோட்டை மட்டுமல்லாமல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாத்துரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார்கோட்டை, மதுரையில் உள்ள அவரது அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடிபணம், 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் கூறினர்.