திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தடாலடியாகக் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் மீண்டும் இன்று முதல் கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
கலைஞர், ஜெயலலிதா இல்லாத ஒரு அரசியல் களத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு காண்கிறோம். திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதா கலைஞர் இவர்கள் எல்லாம் போராடிதான் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்”
உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். தற்போது நீதிமன்றத்திற்கே உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. பல்கலைக் கழகங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பது வேதனையே. மார்க் வழங்குவதில் மட்டுமல்ல இடம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளது.
கல்வி, ஊழல் நிறைந்ததாக மாறி வருகிறது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வாக்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். மார்க்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
சிலைத் திருட்டில் நியாமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விசாரனையை தவிர்த்து வேற ஒரு விசாரனைக்கு மாற்றியமைத்தது உண்மையை மறைக்கவோ என சந்தேகம் அனைத்து மக்களும் எழத் தொடங்கியுள்ளது” என்று கூறினார்.