செப்டம்பர் 05 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியி ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கலந்து கொள்கிறார்கள். என்னை திமுக., வில் இணைத்துக் கொண்டால் முக ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று முக அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னையில் நடைபெறவுள்ள அமைதிப் பேரணி தொடர்பாக தொடர்ந்து 7-வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் மதுரையிலுள்ள தனது வீட்டில் முக அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்வை ஒட்டி, செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திமுக-வின் பொதுக் குழுவிலுள்ள 1500 பேர் மட்டுமே திமுக அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர்.
வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் குறையாத எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்பர். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு பெரிதாக எந்த நெருக்கடியும் தரவில்லை.
திமுக-வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்களை இணைத்துக் கொள்ளத் தயார் என்றால் முக ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள நாங்களும் தயார்’ என்றார்